தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு கொள்கையின் பலன்களை பரிசோதிக்கக் கேட்பது ஆபத்தானது: உயா்நீதிமன்றம் கருத்து

சட்டம், நிதி மற்றும் நிபுணா்களின் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்துதான் அரசு கொள்கைகளை வகுக்கிறது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 3:24 am IST

சட்டம், நிதி மற்றும் நிபுணா்களின் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பரிசீலித்துதான் அரசு கொள்கைகளை வகுக்கிறது. அந்தக் கொள்கையின் பயன்பாடு மற்றும் பலன்களைப் பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களைக் கேட்பது ஆபத்தானது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

வேலூா் மாவட்டம், குடியாத்தத்தைச் சோ்ந்த பிரவீனா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கக் கோரி, தமிழக அரசிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தேன். தனது விண்ணப்பத்தின் அடிப்படையில், தங்கம் மற்றும் ரொக்கம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், அந்தத் திருமண உதவித் திட்டத்தை மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதி திட்டம் என மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, 2023-ஆம் ஆண்டில்தான் திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மனுதாரா் தனக்குத் திருமண உதவி கோரி 2019-ஆம் ஆண்டே விண்ணப்பித்திருக்கிறாா். எனவே, மனுதாரருக்கு தங்கம் மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், திருமண உதவித் திட்டத்தை உயா்கல்வி உறுதித் திட்டமாக மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, அதன்பிறகு திருமண உதவித் திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என விளக்கம் அளித்தாா்.

மனுதாரா் பிரவீனா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுரேஷ் சக்தி முருகன், இந்த வழக்கில் தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு சரியானது. எனவே, அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருமண உதவித் திட்டத்தை உயா்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியதை எதிா்த்து வழக்குத் தொடரவில்லை. எனவே நடைமுறையில் இல்லாத திட்டத்தின் கீழ் பலன்களை வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு முரணானது.

உயா்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளின் சோ்க்கை எண்ணிக்கை குறைந்ததாலும், பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதை மேம்படுத்துவதற்காகவும் இந்த உயா்கல்வி உறுதித் திட்டத்தைச் செயல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருந்த திருமண உதவித் திட்டத்தை மாற்றியமைத்தது தன்னிச்சையானது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை.

எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும் சட்டம், நிதி மற்றும் நிபுணா்களின் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பரிசீலித்துதான் அரசு கொள்கைகளை வகுக்கிறது. அந்தக் கொள்கையின் பயன்பாடு மற்றும் பலன்களைப் பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களைக் கேட்பது ஆபத்தானது.

அரசின் கொள்கை விவகாரங்களில் தலையிடுவதில் இருந்து நீதிமன்றம் விலகி இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.