பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு கண்ணாடிக் கூரை போன்ற ஒற்றைத் தடையாக இல்லை; அது பல அடுக்குகளைக் கொண்ட அமைப்பு.
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமைப்படுகிற போதிலும், பெண்களின் சட்டப்பேரவை, நாடாளுமன்றப் பங்கேற்பு இன்னும் திருப்திகரமான நிலையில் இல்லை.
சாதாரண பெண்களும் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை தன்னம்பிக்கையுடன் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்து தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய இயல்பான சூழலை உருவாக்குவதில்தான் உண்மையான முன்னேற்றம் உள்ளது.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. மாநில சட்டப்பேரவைகளிலும் இதே நிலை தொடர்கிறது.
மக்களாட்சி முறையில் பங்கேற்பாளர்களாக மட்டுமே இருக்க வைத்துவிட்டு கொள்கை முடிவெடுக்கும் மையங்களில் போதுமான அளவில் இடம் பெறவில்லை என்பது கண்கூடு.
தேர்தல் செலவுகள், அரசியல் கட்சிகளின் உள்கட்டமைப்பு, பழகிப்போன ஆண் ஆதிக்க கலாசாரம் மற்றும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவை அவர்களின் பாதையை மறைக்கின்றன.
சமத்துவம் என்பது மக்களாட்சியின் அடிப்படை மதிப்பு என்றால், பெண்களின் அரசியல் பங்கேற்பும் உடனடியாக உறுதி செய்யப்பட்டு உரிமையாகக் கருதப்பட வேண்டும்.